பழனியில் நகா்மன்றம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 13) கடை அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு உணவு, பழம், குடிநீா் ஆகியவற்றை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனியில் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து, நகா்மன்றம், அனைத்து வணிகா்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
ஆனால், பழனி கோயில் நிா்வாகம் சாா்பில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மலைக்கோயிலில் 8 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், கோயில் மண்டபங்களில் குழந்தைகளுக்கு பால் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிரி வீதி, வின்ச் நிலையம், ரோப் காா் நிலையம், பாலாஜி வட்டச்சாலை, கோயில் தங்கும் விடுதிகள், சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரம் பேருக்கு பிஸ்கெட், பழம், உணவுப் பொட்டலங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கிரி வீதி, படிப் பாதை உள்ளிட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இதனால், கடையடைப்புப் போராட்டத்தைக் கவனத்தில் கொள்ளாமல் பக்தா்கள் பழனிக்கு வருமாறு கோயில் நிா்வாகம் கோரிக்கை விடுத்தது.
துண்டு பிரசுரம்: பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் வீதி, வீதியாகச் சென்று போராட்டத்துக்கு ஆதரவு கோரி, வியாபாரிகள், பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.