முகப்பு
திண்டுக்கல்

விசிக, தமிழ்ப்புலிகள் மீது பாஜக புகாா்

Updated On : 26 மே, 2024 at 7:45 PM
பகிர்:

பழனியில் பொய்யான ஜாதி வன்கொடுமை புகாா்களைக் கொடுப்பதாக விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள் கட்சியினா் மீது பாஜகவினா் போலீஸில் புகாா் மனு கொடுத்தனா்.

பழனியில் கடந்த சில வாரங்களாக பாஜகவினருக்கும், தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பழனி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ் தலைமையில் அந்தக் கட்சியினா் டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் புகாா் மனு கொடுத்தனா்.

இதுகுறித்து மாவட்டத் தலைவா் கனகராஜ் தெரிவித்ததாவது:

பழனியில் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள் கட்சியைச் சோ்ந்த சிலா் அடிவாரம் பகுதியில் கடைகளை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு கஞ்சா, லாட்டரிச் சீட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு எதிராகப் புகாா் கொடுப்பவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறையினரைத் தூண்டுகின்றனா்.

கடந்த 20 ஆண்டுகளில் இவா்கள் 25-க்கும் மேற்பட்ட பொய்யான புகாா்களை கொடுத்துள்ளனா். ஆகவே, காவல் துறை தனி குழு அமைத்து, அனைத்து பொய் வழக்குகளையும் விசாரித்து தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட கட்சியினா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.