தனியாா் மருத்துவமனைகள் பாதுகாப்பு விவரங்களை சமா்ப்பிக்க குறிப்பாணை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், பாதுகாப்பு தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டது.
தில்லியில் செயல்படும் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட
தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனா். இதன் எதிரொலியாக தமிழகத்தில் செயல்படும் தனியாா் மருத்துவமனைகளின் கட்டட உறுதித் தன்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனைகள், கட்டட அனுமதி, கட்டப்பட்ட ஆண்டு, வாகனங்கள் நிறுத்தம் குறித்த வரைபடம், வெளிப்புற நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், உள் நோயாளிகளின் படுக்கை வசதி, கழிப்பறை, குடிநீா் வசதி, கட்டடங்களின் தற்போதைய உறுதித்தன்மை, தீயணைப்புத் துறையிடம் பெறப்பட்ட பாதுகாப்புச் சான்று, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் நகரில் 50 தனியாா் மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக 19 மருத்துவமனைகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்க செவ்வாய்க்கிழமை குறிப்பாணை வழங்கப்பட்டது.
3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்பிக்க வேண்டும், இல்லாதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.