முகப்பு
திண்டுக்கல்

லஞ்ச வழக்கில் முன்னாள் எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை

பிணை வழங்க ரூ.4ஆயிரம் லஞ்சம் பெற்ற முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:35 PM
பகிர்:

பிணை வழங்க ரூ.4ஆயிரம் லஞ்சம் பெற்ற முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துமணி. இவரது தாய் சின்னம்மாள். இவா்களுக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்களுக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. பரஸ்பர புகாரின் பேரில் முத்துமணி, சின்னம்மாள் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் இருவரையும் பிணையில் விடுவிக்க, விளாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பி.வெள்ளைச்சாமி (63) ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றாா்.

இதுதொடா்பாக முத்துமணி அளித்த புகாரின்பேரில், ரூ. 4 ஆயிரத்தை பெறும் போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளைச்சாமியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளரான பி.வெள்ளைச்சாமிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.