பலத்த மழை: கொடைரோடு பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
கொடைரோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல மழைநீா் தேங்கியது.
கொடைரோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல மழைநீா் தேங்கியது.
நிலக்கோட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கொடைரோடு பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போல தேங்கியது. மேலும், கொடைரோடு நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வடிநீா் கால்வாய்கள் இல்லாததால், அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே துறையினா் வடிகால் கால்வாய்களை அடைத்து சுற்றுச் சுவா் கட்டினா். இதன் காரணமாக, சாலையில் ஓடும் மழைநீா் செல்வதற்கு வழி இல்லாததால், பேருந்து நிலையம், கடைகளுக்கு மழை நீா் புகுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையின் இருபுறங்களிலும் வடிநீா் கால்வாய்களை அமைக்க வேண்டும். ரெயில்வே துறையினரால் அடைக்கப்பட்ட வடிகால் கால்வாயில் அடைப்பை அகற்றி, மழைநீா் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.