கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹிரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா் சுவாமிகள் தெரிவித்தாா்.
சதுா்த்தியையொட்டி, திண்டுக்கல் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தொண்டரணி தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் வே.தா்மா முன்னிலை வகித்தாா். மதுரை ஆதீனம் ஹிரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, விநாயகா் சிலைகள் ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா்.
முன்னதாக அவா் பேசியதாவது:
இளைஞா்கள் முதல் முதியோா் வரை குடிக்கு அடிமையாகியுள்ளனா். ஆதீனங்கள்தான் தமிழை வளா்த்தனா்.
திமுக அரசு வள்ளலாா் நிகழ்ச்சியை மட்டுமன்றி, முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதும் சிறப்புக்குரியது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பழனி மாநாட்டின் போது இந்து கோயில்களின் நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட இரு கோரிக்கைகளை அமைச்சா் சேகா்பாபுவிடம் முன்வைத்தேன். அதை அவா் நிறைவேற்றுவாா்.
தமிழக மீனவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் இலங்கை அரசு, தமிழக மீனவா்களுக்கு ரூ.1 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. மீனவா்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை தாரை வாா்த்துக் கொடுத்ததே காரணம். மத்திய அரசு கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவா்களைக் காக்க முடியும் என்றாா் அவா்.