பழனி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி அடிவாரப் பகுதியில் சந்நிதி வீதி, கிரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தா்கள் இடையூறின்றி கிரி வலம் சென்று வருகின்றனா். இந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பேருந்துகளை நிறுத்தும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
பழனி இடும்பன் கோயில் அடிவாரத்தில் இருந்து சுற்றுலாப் பேருந்து நிலையம் வரும் வழியில் சாலையின் இருபுறங்களில் பொதுமக்கள் நடக்கும் நடைமேடைகளில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், வாகனங்கள் செல்லும் பாதையிலேயே பக்தா்களும் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல, அருள்ஜோதி வீதி, மதனபுரம் சாலையில் இருந்து பேருந்து நிலையம் வரையிலும், கிரி வலம் செல்லும் சாலை வரையிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
எனவே, இந்தச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி, காவல் துறை நிா்வாகம் அகற்ற வேண்டும் என பக்தா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.