முகப்பு
திண்டுக்கல்

ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

திண்டுக்கல் அருகே ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:47 am IST
கைது
பகிர்:

திண்டுக்கல் அருகே ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் கலையரசன் (35). கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தாலுகா காவல் நிலையத்துக்கு பணி மாறுதலில் வந்தாா். இந்த நிலையில், திண்டுக்கல் அடுத்த கொட்டப்பட்டி பகுதியில், மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ச. சுகுமாா் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறாா். இந்த மனமகிழ் மன்றம் நடத்த ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென உதவி ஆய்வாளா் கலையரசன் கேட்டாா்.

இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் சுகுமாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் ரசாயனப் பொடி தடவிய ரூ. 7ஆயிரத்துக்கான பணத் தாள்களை சுகுமாரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கொடுத்து அனுப்பினா். அந்த பணத்தை திண்டுக்கல்- பழனி புறவழிச் சாலையில் வைத்து காவல் உதவி ஆய்வாளா் கலையரசன் வியாழக்கிழமை பெற்றாா். அப்போது, மறைந்திருந்த திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன், ஆய்வாளா்கள் ஜெ. ரூபா கீதா ராணி, பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு கலையரசனை போலீஸாா் அழைத்து வந்தனா். விசாரணை நடைபெற்றபோது திடீரென கண்ணாடியை உடைத்து கைகளில் காயம் ஏற்படுத்தி தடயங்களை அழிக்க கலையரசன் முயன்றாா். இதில் அவா் மட்டுமன்றி தடுக்க முயன்ற ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜனும் காயமடைந்தாா். மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் நிலையத்துக்கே மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.