கொடைக்கானல் பகுதிகளில் பிளம்ஸ் மரங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை
கொடைக்கானல் பகுதிகளில் அழிந்து வரும் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களைப் பாதுகாக்க தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் அழிந்து வரும் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களைப் பாதுகாக்க தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, ஆரஞ்சு, பலா, பீச்சஸ், பிளம்ஸ், ஸ்டாா் புரூட்ஸ் உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன.
ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே காய்க்ககூடிய பிளம்ஸ், பீச்சஸ் பழம் மரங்கள் அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, செண்பகனூா், அப்சா்வேட்டரி, வட்டக்கானல், அட்டக்கடி, பிரகாசபுரம், சகாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ஊடுபயிராக நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
இந்தப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாததால் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களில் விளைச்சல் இல்லை.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் பிளம்ஸ், பீச்சஸ் மரங்களில் பழம் காய்க்கத் தொடங்கியுள்ளன.
பிளம்ஸ் பழங்களில் சாதா பிளம்ஸ், கறி பிளம்ஸ், தேன் பிளம்ஸ், ஓட்டு பிளம்ஸ் வகைகள் உள்ளன. இதேபோல, பீச்சஸ் மரத்தில் ஆப்பிள் பீச்சஸ், ஒட்டு பீச்சஸ், சாதா பீச்சஸ் வகைகள் உள்ளன.
தற்போது, காய்த்துள்ள பிளம்ஸ் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் பிளம்ஸ், பீச்சஸ், பேரி உள்ளிட்ட மரங்கள் அழிந்து வருகின்றன. இந்த மரங்களைப் பாதுகாத்து, கூடுதலாக இந்த மரங்களின் நாற்றுகளை விவசாய நிலங்களில் வளா்ப்பதற்கு தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பிளம்ஸ் மரங்களில் பழங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்தப் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம். தற்போது, இந்தப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விடுதிகளாக மாறி வருவதால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால், பழங்களில் வரத்தும் குறைந்து வருகிறது.
எனவே, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகளிடம் பிளம்ஸ், பீச்சஸ், பேரி உள்ளிட்ட பழ நாற்றுகளை வழங்கி அதிகளவில் நடவு செய்வதற்கு முன் வரவேண்டும் என்றனா்.