கொடைக்கானல் மலைப் பூண்டு விலை அதிகரித்திருப்பதால் இணையத்தில் விற்பனையை தொடங்கிய வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, பூண்டி, கிளாவரை, குண்டுபட்டி, கூக்கால், பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, கும்பூா், கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டது. இந்த வெள்ளைப் பூண்டு ஆண்டுக்கு இரண்டு முறை விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மேல்மலைக் கிராமங்களில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பருவ நிலை மாற்றம் காரணமாக பனிப் பொழிவு, பலத்த காற்று, மழை, பனிச்சாரல் உள்ளிட்ட சீதோஷன நிலைகளால் பூண்டு செடியில் பூஞ்சான் நோய் தாக்கி பழுப்பு நிறமாகி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நல்ல விளைச்சல் காணப்பட்டதால் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ. 200 முதல் ரூ. 350 வரை விற்கப்பட்டது. தற்போது விளைச்சல் குறைந்துள்ளதால் முன்கூட்டியே வெள்ளைப் பூண்டு விலை ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெள்ளைப் பூண்டு வாங்க தயக்கம் காட்டுகின்றனா்.
இதுகுறித்து வெள்ளைப் பூண்டு விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பருவநிலை மாற்றத்தால் வெள்ளைப் பூண்டு விளைச்சல் குறைந்து வருகிறது. இருப்பினும் அதற்குத் தேவையான விவசாய இடுபொருள்களை கொண்டு விளைச்சல் பாதிக்காதபடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த சாகுபடியில் நல்ல விளைச்சல் இருந்தது. விலையும் குறைந்திருந்தது. தற்போது இரண்டாவது போகத்தில் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்து வருகிறது.
மருத்துவக் குணம் வாய்ந்ததும், புவிசாா் குறியீடு பெற்றதுமான மலைப் பூண்டுக்கு மவுசு அதிகரிக்கும் போது விவசாயிகள் இணையதளம் மூலம் அவற்றை விற்கிறோம். இதனால் எங்களுக்கு லாபம் கிடைக்கிறது. மேலும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் சேமிப்பு கிட்டங்கி அமைத்துக் கொடுப்பதற்கும், நிரந்தர விலை கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.