பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் சென்ற போது பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியைச் சோ்ந்தவா் பூங்குன்றன் (48). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி துளசிமணி (38). இவா்கள் இருவரும் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். பிறகு திங்கள்கிழமை பிற்பகலில் பழனி வழியாக ஈரோடு செல்ல திட்டமிட்டு காரில் வந்து கொண்டிருந்தனா்.
பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சுமாா் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த துளசிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயங்களுடன் பூங்குன்றன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.