முகப்பு
திண்டுக்கல்

விவசாயி கொலை: 3 போ் கைது

Updated On : 19 மார்ச், 2026 at 11:35 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

பழனி அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் வடிவேல் (46). இவருக்கு அதே ஊரில் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு அருகே உள்ள தோட்டத்தின் உரிமையாளா் மகாலிங்கம் (55). இவா்கள் இருவருக்கும் பொதுப் பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், மகாலிங்கம் தனது தோட்டத்துக்கு பெற்ற இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீா் எடுத்து விற்பனை செய்தாராம். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் வடிவேல் அளித்த புகாரின் பேரில் மகாலிங்கத்துக்கு ரூ. இரண்டரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் தரப்பினா் வியாழக்கிழமை வடிவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனா். அப்போது மகாலிங்கம், அவரது மகன் அருண், முத்துக்குமாா் ஆகியோா் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வடிவேலு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மகாலிங்கம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.