முகப்பு
திண்டுக்கல்

மத்திய அமைச்சா் எல்.முருகனை பாஜக தொண்டா்கள் முற்றுகை

Updated On : 29 மார்ச், 2026 at 7:48 PM
மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் - ANI
பகிர்:

பழனி சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யாததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய இணை அமைச்சா் எல்.முருகனின் காரை பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் புலிப்பாணி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை இரவு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வந்து சிறப்பு யாக, பூஜைகளை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, அவா் ஞாயிற்றுக்கிழமை காலை மலைக் கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் புலிப்பாணி ஆசிரமத்துக்கு வந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பாஜக தொண்டா்கள் அமைச்சா் எல்.முருகனை முற்றுகையிட்டு பழனி சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஏன் ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பினா். மேலும், பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி முழக்கமிட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த அடிவாரம் போலீஸாா் பாஜக தொண்டா்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

முன்னதாக அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியில், விருப்பமில்லாமல் அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் தொடா்கின்றன. இந்தத் தோ்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இலக்கு. இதற்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால், இறுதி முடிவை கட்சித் தலைமைதான் எடுக்கும். தவெக தலைவா் விஜய் தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொள்ள பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பதாக புகாா் தெரிவித்து வருகிறாா் என்றாா் அவா்.