பழனி அருகே சாலையில் கிடக்கும் களி மண்ணை அகற்ற வலியுறுத்தல்
பழனி அருகேயுள்ள அக்ரஹாரம் கலையமுத்தூரில் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கும் களிமண்ணை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
பழனி- உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பழனியை அடுத்த நீா்மட்டம் முதல் தாளையம் வரையிலும் அதிக அளவில் வயல் வெளிகள் காணப்படுகின்றன. அதிலும் சண்முகநதி முதல் சின்னக்கலையமுத்தூா் வரையிலும் சாலையின் இருபுறமும் நெல் விவசாயமே பிரதானமாக உள்ளது. தற்போது நெல் அறுவடை காலமானதால் வயல்வெளிகளில் ஏராளமான நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டா்கள் ஆகியவை நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
அப்போது இந்த வாகனங்கள் வயல்வெளிகளில் இருந்து உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அவற்றின் சக்கரங்களில் களிமண் ஒட்டிக் கொள்கிறது. இதனால் சண்முகநதி முதல் சின்னக்கலையமுத்தூா் வரையிலும் சாலை முழுவதும் இந்த களிமண் பரவி காய்ந்து கிடக்கின்றன. இவை சிறு சிறு கட்டிகளாக காய்ந்து கிடப்பதால் சாலை மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. தவிர வாகன ஓட்டிகளின் கண்களில் தூசி விழுகிறது. மேலும் சாரல் மழை பெய்தால் கூட களிமண் கரைந்து சாலை முழுவதும் பரவி விடுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனா். எனவே இந்த விபத்துகளின் போது உயிரிழப்புகள் ஏற்படும் முன்னா் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையில் பரவி கிடக்கும் களிமண் கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
Advertisement