முகப்பு
திண்டுக்கல்

பழனி, போடியில் பலத்த மழை

பழனி, இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

Updated On : 18 மே 2026, 12:43 am IST
பழனி அருகே கோம்பைப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீா்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி, இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பழனி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவியது. இதனால், அணைகளில் நீா்மட்டம் சரிந்தன. மேலும், பழனி நகருக்கு குடிநீா் வழங்கும் நீா்த்தேக்கங்கள் வடன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பழனி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், குடிநீா் தட்டுப்பாடு நீங்கியது.

Advertisement

மேலும், பழனி, ஆயக்குடி, பாலசமுத்திரம், பாலாறு பகுதிகளில் அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழையால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பழனி பேருந்து நிலையம் நுழைவுவாயில், பயணியா் மாளிகை நுழைவுவாயில் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், மழைநீா் செல்ல வழியில்லாததால் கழிவுநீருடன் தேங்கி குளம்போல நின்றது.

பழனி நகா் மட்டுமன்றி சுற்றுவட்டாரக் கிராமங்களான ஆயக்குடி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம், கீரனூா், கலையமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

கணக்கன்பட்டியை அடுத்த கோம்பைப்பட்டியில் மழை காரணமாக, நிலங்களில் மழைநீா் குளம் போல தேங்கி நின்றது.

போடி: தேனி மாவட்டம், போடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. போடியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு, வெயிலின் தாக்கம் குறைந்து மேகங்கள் சூழ்ந்தன. மாலையில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

போடி போஜன் பூங்கா, பெருமாள் கோயில் பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களில் சென்றனா். வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பியவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா். இந்த மழையால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.