மதுரை மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களில் விண்ணப்ப புத்தத்தைப் பெற்று குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பெறும்போது வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். அதன் ரசீது நகல்களையும் இணைக்கவேண்டும். விண்ணப்பங்கள் மண்டல அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அனுப்பி மறுமதிப்பீடு அறிக்கை பெறப்படும்.
வீட்டின் உரிமையாளர்களுக்கு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான மதிப்பீடு தொகை அவர்களது செல்லிடப்பேசியில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். தகவல் வந்த பிறகு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் அந்தநந்த மண்டல கருவூலங்களில் பணத்தை முறையாகச் செலுத்தி ரசீதைப் பெறலாம். இணைப்புக்கான உத்தரவையும் பெறலாம். கட்டணம் செலுத்தி பெற்ற உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சியில் அனுமதி பெற்ற பிளம்பர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வார்டுப் பொறியாளர்கள் முன்னிலையில் புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பை பெறமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.