கோரிப்பாளையம், காளவாசல் மேம்பாலப் பணிகள் எப்போது நிறைவேற்றப்படும்? மாநகராட்சி நிர்வாகத்துக்கு மார்க்சிஸ்ட் கேள்வி
மதுரை நகரில் கோரிப்பாளையம், காளவாசல் மேம்பாலத் திட்டங்கள் எப்போது நிறைவேற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
மதுரை நகரில் கோரிப்பாளையம், காளவாசல் மேம்பாலத் திட்டங்கள் எப்போது நிறைவேற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்ட செயலர் சி. ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு அறிக்கை:
மதுரை மாநகராட்சியில் ரூ.2,166.8 கோடி மதிப்பிலான 2018-2019-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையை ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதில் அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாம் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவேண்டும். மாநகராட்சியில் கோடைகாலத்தில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றுமாவடி முதல் அய்யர் பங்களா வரை சாலை அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பதை தவிர, வேறு புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வழியாக திருமலை நாயக்கர் மஹால் வரை சாலை மேம்பாடு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 வெளிவீதிகள் மற்றும் மாசி வீதிகளை மேம்படுத்துவதன் மூலமே போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்கமுடியும்.
இதே திட்டத்தின் கீழ் வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ.90 கோடி செலவில் சாலைகளை மேம்படுத்தும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். மேலும் இத்திட்டத்தை சமயநல்லூர் 4 வழிச்சாலை வரை நீட்டிக்க வேண்டும்.
மதுரையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள கோரிப்பாளையம் மேம்பாலம், காளவாசல் மேம்பாலம், மதுரை திண்டுக்கல் சுற்றுச்சாலை, கீழவாசல் (செயிண்ட்மேரீஸ்) சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. இத்திட்டங்கள் தொடர்பாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட வேண்டும். மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. டவுன்ஹால் ரோடு, பெருமாள் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளம், தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பக்குளம், மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் இவற்றில் மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.