மும்பையில் நடைபெற்ற தேசிய நிதி கல்வியறிவு மதிப்பீட்டு தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சி ஈ.வே.ரா.பள்ளி மாணவியரை ஆணையர் அனீஷ்சேகர் வியாழக்கிழமை பாராட்டினார்.
தேசிய வர்த்தக பாதுகாப்பு மைய நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகள் அளவில் தேசிய நிதி கல்வியறிவு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.
இதில் முதல் கட்டத் தேர்வில் மதுரை ஈ.வே.ரா.மாநகராட்சி பள்ளி மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்ட ஜூனியர் அளவிலான தேர்வு மும்பையில் நடைபெற்றது. அதில் தேசிய அளவில் 43 பள்ளிகள் பங்கேற்றன. தமிழக அளவில் இரு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் மதுரை மாநகராட்சிப் பள்ளியான ஈ.வே.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவியர் பி.வி.கலைவாணி, எல்.சுவேதாராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு நிறுவனம் சார்பில் தலா ரூ.3 ஆயிரம் பரிசுகளும், பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கும் சிறப்பு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்று மதுரை திரும்பிய மாணவியரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.