வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீகப் பாசனப் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு புதன்கிழமையில் (நவ.14) இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆறு மற்றும் கால்வாயில் இறங்கி குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல், கால்நடைகளைக் குளிப்பாட்டுதல், வாகனங்களைக் கழுவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.