"அம்மா' இருசக்கர வாகனத் திட்டம்: ஜன.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
"அம்மா' இருசக்கர வாகனத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி வரை கால அவகாசம்
"அம்மா' இருசக்கர வாகனத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ் ஆண்டுக்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. நகர மற்றும் கிராமங்களில் வசிக்கும் வாழ்வாதாரப் பணிகளில் ஈடுபடுவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள், சமுதாயம் சார்ந்த நிறுவனங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வங்கி தொடர்பாளர்கள், மாவட்ட கற்றல் மையம், ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் இத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான காலஅவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.