சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் சாட்சியை மிரட்டிய 7 பேர் மீது வழக்கு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் கொலை வழக்கு குற்றவாளிகளை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் கொலை வழக்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த ரௌடி கமல் கருப்பு. கடந்த மாதம் மதுரை ஆரப்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் இவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதுதொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிள்ளையார் பிரபு உள்பட 7 பேரை கைது செய்தனர். 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலை வழக்குத் தொடர்பாக, கொலையாளிகளை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கமல் கருப்புவின் சகோதரி கிருஷ்ணவேணி(31), மதுரை நீதித்துறை நடுவர் மன்றம்(எண் 5-இன்) நடுவர் மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கமல் கருப்பு கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையார் பிரபு, சுட்டு முனீஸ், நரி விக்னேஷ், அர்ஜூன், முத்துராமன், சுபீர் அலி, வேதாளம் என்ற வெற்றிவேல் ஆகிய 7 பேரையும் கிருஷ்ணவேணி அடையாளம் காட்டினார். அப்போது 7 பேரும் கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி, கிருஷ்ணவேணியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுதொடர்பாக கிருஷ்ணவேணி அளித்தப் புகாரின்பேரில் மிரட்டல் விடுத்த 7 பேர் மீதும் செல்லூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.