தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளைத் தொடரும் பேரிடர் மீட்புக் குழுக்கள்...
புது தில்லி : தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே கட்டப்பட்டிருந்த அடுக்குக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள 3 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை (மே 30) மாலை இடிந்து விழுந்தது. வணிக ரீதியான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்திலிருந்த இளைஞர் ரவி (26 வயது) இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி தீயணைப்பு சேவைகள் வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோத்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையிலும் தொடருகிறது.
இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Delhi: 3-storey commercial building reduced to rubble; 12 rescued as search continues
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.