கின்னஸ் சாதனைக்காக காரில் பயணம் செய்யும் குஜராத்தை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் பாரத் தேவ் (60), வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் வந்தார்.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி 29 நாள்களில் 29 மாநிலங்களுக்கு காரில் சென்று கின்னஸ் சாதனை படைக்க பாரத்தேவ் முயற்சித்துள்ளார். இதற்காக கடந்த ஜூலை 7 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனது பயணத்தை தொடக்கினார். நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 கிலோ மீட்டர் தூரம் அவரே காரை ஓட்டிச்செல்கிறார்.
திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் செளராஷ்டிரா கல்லூரிக்கு பாரத் தேவ் வந்தார். அவருக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம், உடற்கல்வி இயக்குநர் ரவீந்திரன், பேராசிரியர் ரோகிணி, செளராஷ்டிரா பவுண்டேசன் தலைவர் ராமசுப்பிரமணியன், செளராஷ்டிரா மத்திய சபா பொதுச்செயலர் சாந்தாராம் ஆகியோர் வரவேற்றனர்.
பயணம் குறித்து பாரத் தேவ் செய்தியாளர்களிடம் கூறியது: நான் கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இப்பயணம் குறித்து கூறியபோது அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அகமதாபாத்தில் இருந்து போபால், மும்பை, திருவனந்தபுரம் வழியாக தற்போது தமிழகம் வந்துள்ளேன். திட்டமிட்டபடி பயணம் செய்து தேசிய ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, குஜராத் காந்தி நகரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன். இதுவரை 16 நாடுகளுக்கு சென்றுள்ளேன். சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கார் ஓட்டி பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளேன் என்றார்.