மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் "ஸ்கேன்' இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக "ஸ்கேன்' இயந்திரம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், கால்களில் உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், காலை அகற்றவோ அல்லது உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த அடைப்பை கண்டுபிடிக்க பிரத்யேக சி.டி. "ஸ்கேன்' பயன்படுத்தப்படுகிறது. "ஸ்கேன்' மூலம் அறிந்த பிறகு எந்த மாதிரியான சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் முடிவு செய்கின்றனர்.
"ஸ்கேன்' இயந்திரம் பழுது: இந்நிலையில், கடந்த 4 -ஆம் தேதி இம் மருத்துவமனையில் உள்ள சி.டி. "ஸ்கேன்' இயந்திரம் பழுதானது.
இந்த இயந்திரத்தின் பராமரிப்புப் பணிகள் அனைத்தும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் உள்ளதால், இதை பழுது பார்ப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் தெரிவித்தது. ஆனால், ஒரு வாரத்துக்கு மேலாகியும் "ஸ்கேன்' பழுது நீக்கப்படவில்லை.
இதனால், அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டிய நோயாளிகளும், "ஸ்கேன்' எடுக்க வேண்டிய நோயாளிகளும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தினமணி செய்தி எதிரொலி: இது குறித்து, கடந்த 11 ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 13 ஆம் தேதி முதல் "ஸ்கேன்' பழுதை சரிபார்க்கும் பணியில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதையடுத்து, கடந்த 21-ஆம் தேதி (சனிக்கிழமை) "ஸ்கேன்' பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அன்றைய தினமே மீண்டும் பழுதானதால், சரிபார்க்கும் பணி மீண்டும் தொடங்கியது. அதன்பின்னர், "ஸ்கேன்' முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் நோயாளிகளுக்கு "ஸ்கேன்' எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த நோயாளிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
"ஸ்கேன்' செயல்பாடு திருப்தி: இது குறித்து மருத்துவமனை முதன்மையர் கே. வனிதா கூறியது: "ஸ்கேன்' இயந்திரம் பழுது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. "ஸ்கேன்' இயந்திர நிறுவனப் பொறியாளர்கள் வந்து இயந்திரத்தை முழுமையாக சரிபடுத்தியுள்ளனர். தற்போது, "ஸ்கேன்' இயந்திரம் நன்றாக இயங்குவதால், நோயாளிகளுக்கு "ஸ்கேன்' எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.