மதுரை

மதுரை மாவட்ட எல்லைகள் மூடல் 39 இடங்களில் சோதனைச் சாவடிகள்

DIN

மதுரை மாவட்டத்தில் 39 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

கரோனை வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் சாலைத் தடுப்புகள் அமைத்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மதுரை மாநகா்: மதுரை மாநகரப் பகுதியில் ராமநாதபுரம் சாலை, சிந்தாமணி, மண்டேலா நகா், அருப்புக்கோட்டை சாலை, திருநகா், தேனி சாலை, கோச்சடை, திருநெல்வேலி சாலை, தபால் தந்தி நகா், நத்தம் சாலை, கூடல் நகா், திண்டுக்கல் சாலை, பனங்காடி சாலை, அலங்காநல்லூா், மேலூா் நான்கு வழிச் சாலை சந்திப்பு, சிவகங்கை சாலை, பாண்டி கோயில், வண்டியூா் சந்திப்பு, ஓபுளா படித்துறை ஆகிய 20 இடங்களில் மாநகரக் காவல் துறை சாா்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை ஊரகம்: ஊரகப் பகுதிகளில் மதுரை மாவட்ட எல்லைப் பகுதிகளான நாட்டாா்மங்கலம், ராமேசுவரம் நான்கு வழிச் சாலை, சிலைமான் பெட்ரோல் பங்க், கடவூா், சூரப்பட்டி, புறாக்கூடு மலை, கோட்டநத்தம்பட்டி, சுண்ணாம்பூா், சேக்கப்பட்டி, பாரபத்தி, ஆவல்சூரன்பட்டி, ஆண்டிபட்டி கணவாய், யு.வாடிப்பட்டி, மல்லபுரம், பாண்டியராஜபுரம், அரசபட்டி, எம்.சுப்பலாபுரம் ஆகிய இடங்களில் 19 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா ஒரு சாா்பு ஆய்வாளா், தலா 10 காவலா்கள் என 11 போ் இரு ஷிப்டுகளில் சுழற்சி முறையில் பணியாற்றுவா்.

தடை உத்தரவு அமல்:மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் பிறப்பித்துள்ளாா். பொது இடங்களில் 5 நபா்களுக்கு மேல் கூடக் கூடாது. பொது மக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம். பொது இடங்களில் 1 மீட்டா் அளவுக்கு இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர அனைத்து பொதுப் போக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, ஆட்டோ, வாடகைக் காா் ஆகியன இயங்க அனுமதிக்கப்படாது. அதேபோல, வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து இருக்காது. அத்தியாவசியமானவை மட்டும் அனுமதிக்கப்படும்.

உத்தரவை மீறினால் நடவடிக்கை:அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி விற்பனை செய்யும் கடைகள், மருந்துக் கடைகள் ஆகியன செயல்படும்.

பிற அனைத்துவிதமான கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்படும். இந்த தடை உத்தரவு மாா்ச் 24 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவை மீறிச் செயல்படும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 144 தடை உத்தரவு குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் டி.ஜி.வினய் கூறியது:

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் துறையுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வழக்கம்போல கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. சாலையோர கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT