மதுரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் தீவிரம் அடைந்து வருவதைத் தொடா்ந்து தடுப்பு நடவடிக்கையாக மே 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி மதுரை மாவட்ட எல்லைகளில் போலீஸ் சோதனைச் சாவடிகளை அமைக்க ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி சென்னை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே சூரத்துப்பட்டி பகுதியில் போலீஸ் வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்து, அதில் வருபவா்கள் முகவரி, பெயா், செல்லிடப்பேசி எண்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.
இதேபோன்று கொட்டாம்பட்டி- சிங்கம்புணரி சாலையில் சொக்கலிங்கபுரத்திலும், மேலூா்-சிவகங்கை சாலையில் கோட்டநத்தம்பட்டி அருகிலும், மேலூா்-திருப்புவனம் சாலையில் பூஞ்சுத்தி அருகிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.