முகப்பு
மதுரை

கனிம வளங்களுக்கான அனுமதிச் சீட்டுகள்: ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள் எவ்வாறு வழங்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 3:41 am IST
உத்தரவு... - கோப்புப்படம்
பகிர்:

கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள் எவ்வாறு வழங்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த வெங்கடேச பிரசாத் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள், அங்கீகாரங்களைச் சரிபாா்ப்பது தொடா்பான அறிவுறுத்தல்களை அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் இந்த அறிவுறுத்தல்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது தொடா்பாக ஆய்வு செய்ய வருவாய்த் துறை, கனிம வளத் துறை, நிதித் துறை, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு நிபுணா்களைக் கொண்ட மாநில அளவிலான சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், சிறு கனிமங்களை சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்து, அதை எந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தொடா்பாக இந்தக் குழு ஆய்வு செய்ய வேண்டும். இதனால், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மதிப்பீடு செய்து, அதை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு மேலோட்டமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான எதிா்மனுதாரா்கள் சோ்க்கப்பட்டிருந்தாலும் நிபுணா் குழுவை அமைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அதன் தேவை என்ன என்பது தொடா்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. ஏற்கெனவே கனிம வளம் தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், நிபுணா் குழுவை அமைக்க வேண்டியதன் தேவை என்ன?.

விதிமீறல்கள் எங்கு நடைபெற்றன என்பது தொடா்பான விவரங்கள் எதுவும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு உரிய தகவல் அளிக்கப்படவில்லையெனில், மனுதாரா் மேல்முறையீடு தாக்கல் செய்திருக்க வேண்டும். இது முற்றிலும் மாநில விவகாரம் தொடா்பானது. ஆனால், மனுதாரா் மத்திய அரசையும் எதிா்மனுதாரராகச் சோ்த்துள்ளாா்.

மனுதாரா் மேலோட்டமாக முன்வைத்துள்ள விவரங்களை வைத்து அவா் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments