மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம்: வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அகற்றி, இயற்கை வனமாக மீட்டெடுக்கக் கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அகற்றி, இயற்கை வனமாக மீட்டெடுக்கக் கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நாகராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அகற்றி, அந்தப் பகுதியை மீண்டும் இயற்கை வனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இந்தப் பகுதியில் உள்ள 8,374 ஏக்கா் வன நிலங்கள் கடந்த 1929-ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு தனியாா் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் வருகிற 2028, பிப்ரவரி மாதம் நிறைவு பெறுகிறது.
இதனிடையே, உயிரியல் பன்மை, வன விலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுக்க வேண்டியது அவசியம். எனவே, தேயிலைத் தோட்டங்களை அகற்றி, பூா்வீக மரங்களை நடவு செய்து வனத்தை அதன் இயற்கை நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்.
இதற்காக நிபுணா் குழுவை அமைத்து செயல் திட்டம் வகுக்க வேண்டும். சுற்றுச்சூழல் சீரமைப்புக்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், பி.பி. பாலாஜி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொருத்தவரை, ஏற்கெனவே அந்த வனப் பகுதியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.