ராமேசுவரத்தில் பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்களிலிருந்து மின்சாரக் கம்பிகள் ஆபத்தான வகையில் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அதைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் திட்டகுடியில் உள்ள கோயில், கெந்தமாதனபர்வதம், தனுஷ்கோடி மற்றும் மதுரை சாலை ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ள பகுதியில், மின் கம்பங்களிலிருந்து கடைகளுக்குச் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன.
இந்த வழியாக சுற்றுலா வகனங்கள், மீன் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சில நேரங்களில் மின்கம்பிகள் வாகனங்களில் சிக்கி அறுந்து விடுகின்றன.
இதனால், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது, மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை மின்வாரிய அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.