திருவாடானை அருகே சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே உள்ள தினைகாத்தான்வயல் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பயன் பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த தொட்டி சேதம் அடைந்து இடியும் தருவாயில் உள்ளது. இதன் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, கோயில்கள் உள்ளன. இதனால் தொட்டியை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் பயன் இல்லையாம்.
இவ்ழியாக செல்லும்போது பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இத்தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.