முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் வியாழக்கிழமை வயலில் இருந்து டிராக்டரில் வைக்கோலை ஏற்றிச் சென்ற போது மின் கம்பியில் உரசியதால் தீ பற்றியது.
முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தில் வயலில் நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வயலில் இருந்த மீதமுள்ள வைக்கோலை டிராக்டர் மூலம் வயல் உரிமையாளர்கள் சேகரித்து ஏற்றிச் சென்றனர்.
அப்போது மொச்சிகுளம் கிராமத்தின் அருகே மின்கம்பிகள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது தெரியாமல் டிராக்டர் அதில் உரசியது. இதில் வைக்கோல் பாரத்தில் திடீரென தீப் பற்றியது. இது குறித்து தகவல் அறிந்த முதுகுளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் முழுவதும் எரிந்து சேதமானது. அதிஷ்டவசமாக தீ விபத்தில் டிராக்டர் சேதமின்றி தப்பியது.
இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியை உடனடியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.