திருவாடானை அருகே ஆனந்தூர் ராதானூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக மின்தடை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆனந்தூர், ராதானூர், நத்தகோட்டை, பனிக்கோட்டை, கூடலூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, ஆனந்தூர் அருகே உள்ள ராதானூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக, இந்த கிராமங்களுக்கு கடந்த 4 நாள்களாக மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கியுள்ளன. இதனால், இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு மூலம் கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு அலைந்து வருகின்றனர். மேலும், குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு நேரங்களில் மின்விசிறி இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் மாலை நேரங்களில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மின் விநியோகத்தை சீர்செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.