தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் உள்ள சித்தாமை குஞ்சு பொறிப்பகத்தில் 96 குஞ்சுகள் பொறித்ததையடுத்து வனத்துறையினர் அவற்றை வியாழக்கிழமை கடலில் விட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகளவில் சித்தாமைகள் காணப்படுகின்றன. இவை இனப் பெருக்கம் செய்வதற்காக தனுஷ்கோடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து பிப்ரவரி, மார்ச் மாதம் வரையில் வந்து முட்டையிட்டுச் செல்லும்.
இவற்றை வனத்துறையினர் சேகரித்து பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து, அவை பொறித்த பின்பு மீண்டும் ஆமைக் குஞ்சுகளை கடலில் விடுகின்றனர்.
இந்நிலையில், பொறிப்பகத்தில் 96 குஞ்சுகள் பொறித்தன. இவற்றை வனத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான வனத்துறையினர் வியாழக்கிழமை கடலில் விட்டனர். இது வரையில் 122 சித்தாமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டள்ளன. கடந்த ஆண்டை விட மிகவும் குறைவான எண்ணிக்கையில் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், குஞ்சுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.