ராமநாதபுரத்தில் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்ற கடற்படை வீரரை தாக்கிய 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதி அருகேயுள்ள திருவோணத்தைச் சேர்ந்த பாபு மகன் பினில் (29). ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமானத் தளத்தில் பணிபுரிகிறார். இவர், தனது நண்பர்களுடன் சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் இசிஆர் சாலைப் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சிலருக்கும், பினில் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அங்கிருந்தவர்கள் பினில் உள்ளிட்டோரை தாக்கி, மிரட்டி அனுப்பியுள்ளனர். இதில் காயமடைந்த பினில், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளியாகச் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கேணிக்கரை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸார் பினிலை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.