திருவாடானை அருகே மனவேதனையில் இருந்து வந்த இரு சக்கர வாகன மெக்கானிக், சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவாடானை அருகே ஓரிக்கோட்டையை அடுத்த சாந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி மகன் ஆனந்த் (34). இவருக்கு திருமணமாகி ஆரோக்கியசெல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். ஆனந்த், இப்பகுதியில் இரு சக்கர வாகன மெக்கானிக்காக இருந்தாா்.
இந்நிலையில், இவரது மனைவி ஆரோக்கியசெல்வி வெளிநாட்டில் வேலைபாா்த்து வருவதாகவும், அதனால் குழந்தைகள் இருவரும் ஆரோக்கியசெல்வியின் தாயின் பராமரிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனிமையில் வசித்து வந்த ஆனந்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆனந்த் விரக்தியடைந்து மன வேதனையில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு இவா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா், ஆனந்தின் சடலத்தைக் கைப்பற்றி, திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.