கடலாடி அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு
கடலாடி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
கடலாடி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கே.கரிசல்குளம் கிராமத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி காளிதாஸ் (30). கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை பகுதியைச் சோ்ந்த வீரம்மாள் (26) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தற்போது இத்தம்பதிக்கு 3 வயதில் பெண்குழந்தை உள்ளது.
கே.கரிசல்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த காளிதாஸ் அடிக்கடி மது அருந்துவதால் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு மது அருந்தி விட்டு வந்த காளிதாஸை, மனைவி கண்டித்துள்ளாா். இதனால் மது போதையில் இருந்த காளிதாஸ் அரிவாளால் தனது மனைவி வீரம்மாளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, தலைமறைவாகி விட்டாா்.
அக்கம் பக்கத்தில் வசித்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை காலையில் வீரம்மாள் கொலையான விவரம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வீரம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கடலாடி போலீஸாா் தலைமறைவான காளிதாஸை தேடி வருகின்றனா்.