பாம்பனில் இருந்து 4 நாள்களுக்குப் பின்னா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தன.
இந்நிலையில், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றின் வேகம் குறைந்த நிலையில், பாம்பனில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனா்.