ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு அதிமுக சார்பில் அவைத் தலைவர் முருகேசன் மற்றும் அங்குச்சாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் போக்குவரத்து அலுவலகப்பகுதியில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். பட்டிணம்காத்தான் பகுதியில் மண்டபம் ஒன்றிய குழு உறுப்பினர் மருதுபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவினர்.
ராமநாதபுரம் நகரில் கேணிக்கரை சாலை சந்திப்பு,பாரதி நகர், திருப்புல்லாணி, தேவிபட்டிணம்,கீழக்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.