ராமநாதபுரத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் கனி தலைமையில் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சண்டைச் சேவல்களுடன் வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனா்.
இது குறித்து அவா்கள் கூறியது: தமிழா் திருநாளாம் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் தமிழா் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் சிலம்பம், உரியாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிலம்பம் போன்றே சேவல் சண்டையும் தைத் திருநாளில் தென்மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சூதாட்டம் எனக் கூறி சேவல் சண்டை தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தமிழா்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.