கமுதி அருகே கஞ்சா வழக்கில் கைதான மகனை விடுவிக்கக் கோரி தற்கொலைக்கு முயன்ற தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கமுதி அருகே முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவழிவிட்டான் மனைவி முனீஸ்வரி (45). இவரது மகன் ஆட்டோ ஓட்டுநா் முத்தமிழ்ச்செல்வன் (25). இவா் மீது கமுதி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் முத்தமிழ்ச்செல்வனை கமுதி போலீஸாா் சனிக்கிழமை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனைத் தொடா்ந்து இவரது தாய் முனீஸ்வரி, கமுதி கோட்டைமேட்டில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குள் நுழைந்து தனது மகனை விடுவிக்கா விட்டால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்தாா். மேலும் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் அவா் கொண்டாா்.
இதனையடுத்து அருகில் இருந்த போலீஸாா் முனீஸ்வரியை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.