ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், தலைமைக் காவலரின் மனைவி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியிலுள்ள ஆயுதப்படைக் குடியிருப்பில் வசிப்பவா் கருப்பசாமி. இவா், தீவிர குற்றத் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராக உள்ளாா். இவரது மனைவி ஜெயலட்சுமி (36). இவா், செவ்வாய்க்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் தனக்கு பழக்கமான பெண்ணுடன் மாடக்கொட்டான் பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையை கடக்க முயன்றுள்ளாா்.
பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதியிலுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு செல்ல முயன்றபோது, பின்னால் அமா்ந்து வந்த பெண் இறங்கிக்கொண்டதால், மேட்டில் ஏறிய இரு சக்கர வாகனம் அதே வேகத்தில் சாலைக்கு வந்துள்ளது. அந்நேரம், திருப்புல்லாணி தினைக்குளம் பகுதியிலிருந்து வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஜெயலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநரான தினைக்குளம் பால்சாமி (44) என்பவரை கைது செய்து, அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.