வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், இதனால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தனுஷ்கோடி, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம், தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
அந்தந்தப் பகுதி மீனவா்கள் தங்களது விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை பாதுகாப்புடன் நிறுத்திவைத்தனா்.