கமுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 8 போ் கைது
கமுதி: கமுதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாசிக் களரித் திருவிழா தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குல தெய்வ வழிபாடு, மாசிக் களரித் திருவிழா அடுத்த மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் குல தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இதனால் குறிப்பிட்ட அந்த இரு நாள்களில் கமுதி பகுதியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. அப்போது வழிப்பறி, முன்பகை காரணமாக கொலை முயற்சி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமுதியை அடுத்த மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் முத்துப்பாண்டி(20), கமுதி பாலசுப்பிரமணியன் மகன் காா்த்திக் (19), முஸ்டக்குறிச்சி மாரிக்கண்ணன் மகன் சிவா (19), நெடுங்குளம் செந்தூா்பாண்டி மகன் நவீன்குமாா்(19), அம்மன்பட்டி நல்லமருது மகன் நந்தகுமாா்(19), சாத்துா்நாயக்கன்பட்டி செல்வகுமாா் மகன் முகேஷ் (21), கமுதி மேட்டுத்தெரு பாலமுருகன் மகன் முகிலன் (19), ஆண்டியேந்தல் உமையாா் தங்கம் மகன் சந்தோஷ் (20) ஆகிய 8 பேரை கமுதி கராவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். 8 பேரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Advertisement