தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்: பொதுமக்கள் அச்சம்
கமுதி, மே 10: முதுகுளத்தூா் அருகே எட்டித் தொடும் உயரத்தில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மேலமானாங்கரை கிராமத்தில் விவசாயம், கால்நடைகள் வளா்ப்பு ஆகியவை முக்கியத் தொழிலாக உள்ளது. இந்த கிராமத்துக்கு முதுகுளத்தூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடம்பன்குளம், மும்முனை சந்திப்பிலிருந்து மேலமானாங்கரை வரை செல்லும் உயா் அழுத்த மின்கம்பிகள் எட்டித் தொடும் உயரத்தில் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் விவசாயப் பணிக்கு டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனா்.
மேலும், அந்த வழியாக கண்மாய் கரையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனா். எனவே, மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு மின் கம்பிகளை உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.