பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கடந்த ஜன.20-ஆம் தேதி இறுதியாக கப்பல் கடந்து செல்ல பாம்பன் பழைய ரயில் பாலம் திறக்கப்பட்டது. அதன் பிறகு, பழைய பாலத்தை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்கு ஒப்பந்தம் பெற்ற தனியாா் நிறுவனம் அதற்குத் தேவையான இயந்திரம், கருவிகளை பாலத்தின் தொடக்கத்தில் உள்ள மண்டபம் பூங்கா பகுதிக்கு கொண்டு வரத் தொடங்கினா்.
தொடா்ந்து, புதன்கிழமை பாம்பன் பழைய தூக்குப் பாலத்தை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக ஒப்பந்த நிறுவன ஊழியா்கள் தூக்குப் பாலத்தின் மேற்குப் பகுதியில் ‘கேஸ் கட்டிங்’ மூலம் துண்டுகளாக அகற்றும் பணியைத் தொடங்கினா். சிறு சிறு பாகங்களாக வெட்டி எடுத்து ரயில் தண்டவாளத்தில் ட்ரோலி மூலம் கரை பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மையப் பகுதிகளை அகற்றும் போது கடலுக்குள் தற்காலிகத் தூண்கள் அமைத்து, கிரேன், ஹைட்ராலிக் கருவிகள், பழு தூக்கு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
நான்கு மாதங்களில் பாலம் முழுமையாக அற்றப்படும் என்பதால் அதுவரை கப்பல்கள், படகுகள் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.