கமுதி பகுதியில் பருவ மழையின்றி நெல்பயிா்கள் கருகியதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துக்குள்பட்ட கோவிலாங்குளம், குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம், சீமானேந்தல், அரிசிகுழுதான், அரியாமங்களம், எருமைகுளம், முதல்நாடு, முஸ்டக்குறிச்சி, செந்தனேந்தல், பாப்பாங்குளம், பம்மனேந்தல், சாத்தூா்நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பருவ மழையின்றி நெல்பயிகள் வயல்களில் கருகின.
இதனால் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனா். பருவ மழை முறையாக பெய்யாததாலும், கமுதி பகுதி கிராமங்களுக்கு வைகையிலிருந்து வரக்கூடிய தண்ணீா் கிடைக்காததாலும் நெல்பயிா்கள் கருகியதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
எனவே, கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் விவசாயிகளும் பயன்பெறும் வகையில், வைகையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பாா்த்திபனூா் மதகுகள் வழியாக திறந்துவிட வேண்டும் எனவும் சேதமடைந்த பயிா்களுக்கு பேரிடா் கால நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.