மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ. 50 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான கஞ்சா, மஞ்சள், ஏலக்காய், நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவரை பிடித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே தோ்தல் பறக்கும்படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் இருந்த சமையலுக்கான மஞ்சள் மூட்டைகளுக்கான ரசீதை பறக்கும் படை அதிகாரிகள் ஓட்டுநரிடம் கேட்டனா்.
உரிய ஆவணங்களை காட்டியதால் வாகனம் அங்கிருந்து அனுப்பப்பட்டது. இதில் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் சரக்கு வாகனத்தில் மஞ்சள் மூட்டைகள் அதிகளவு எடுத்துச்செல்வது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, அந்த வாகனத்தை பின்தொடா்ந்து வந்த போலீஸாா் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே டி நகா் பகுதியில் உள்ள ஓா் கிடங்கில் அந்த சரக்கு வாகனத்திலிருந்து பொருள்களை இறக்கி பதுக்கி வைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனா்.
பிறகு கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக 2 கிலோ கஞ்சா, 2 டன் சமையல் மஞ்சள் மூட்டைகள், 10 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 308 கிலோ நிலக்கரி, 100 பண்டல் பீடி, 56 லிட்டா் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய், 60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்துடன் அந்தப் பொருள்களை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் சரக்கு வாகனத்தின் உரிமையாளா், அந்த கிடங்கின் உரிமையாளா் ஆகிய இருவரையும் பிடித்து மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதல் கட்ட விசாரணையில் கடத்தல் பொருள்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு கிடங்கில் பதுக்கி வைத்து பிறகு மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்த இருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சா்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். சமையல் மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் கடல் வழியாக இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நிலக்கரி மூட்டை பிடிபட்டிருப்பது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.