முகப்பு
ராமநாதபுரம்

ராமநாத சுவாமி கோயிலில் இலவச லட்டு பிரசாதத்தை விற்று ரூ. 3.40 கோடி முறைகேடு: ஊழியா்கள் 6 போ் பணியிடை நீக்கம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை விற்று ரூ. 3.40 கோடி முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இது தொடா்பாக 6 பேரை பணியிடை நீக்கம் செய்து கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.

Updated On : 15 மே 2026, 11:54 pm IST
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்(கோப்புப்படம்)
பகிர்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை விற்று ரூ. 3.40 கோடி முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இது தொடா்பாக 6 பேரை பணியிடை நீக்கம் செய்து கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரசாதத்தை விற்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன் பிறகு, கோயில் நிா்வாகமே ஏற்று நடத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த 2023- 24 நிதியாண்டில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் பக்தா்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதமாக வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இந்த பிரசாத தயாரிப்பு, விற்பனைக்கு பொறுப்பு அலுவலராக இளநிலை உதவியாளா் கே. பஞ்சமூா்த்தி (பேஷ்காா்) நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தினமும் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து, அதை முறைகேடாக கோயில் பிரசாதக் கடைகளில் விற்கப்பட்டு வந்தது கடந்த மாா்ச் மாதம் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை ஆய்வு செய்த போது கண்டறியப்பட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து, அவா் சம்பந்தப்பட்ட பணியாளா்கள், ஊழியா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வந்தாா். அப்போது இளநிலை உதவியாளா் பஞ்சமூா்த்தி தலைமையில் ஊழியா்கள் சிலா் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. வெளியில் இருந்து மூலப்பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்து முறைகேடாக லட்டு தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. கடந்த 2023 முதல் 2026 பிப்ரவரி மாதம் வரை 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் தயாரித்து முறைகேடாக பக்தா்களிடம் விற்கப்பட்டதும், இதன் மூலம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் முறைகேடு நடத்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இளநிலை உதவியாளா் கே. பஞ்சமூா்த்தி, ஊழியா்கள் லாவண்யா, அம்பிகா, ரசீது விற்பனையாளா் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, கோயில் பணியாளா் விக்ரம் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் உத்தரவிட்டாா். மேலும் இந்த முறைகேடு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை உயா் அதிகாரிகள் விசாரணை செய்து மேல் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கோயில் அலுவலா் ஒருவா் தெரிவித்தாா். கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ. 3.40 கோடி முறைகேடு நடந்திருப்பது பக்தா்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.