தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கு சிவகங்கையில் இலவச பயிற்சி வகுப்பு: நாளை தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிவகங்கை மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நவ.11-இல் (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிவகங்கை மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நவ.11-இல் (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்கிற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில்,போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களைத் தயார் செய்யும் வகையில் பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் பத்திரிகைகள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-4 பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவ.11-இல் தொடங்க உள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கெனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
ஆகவே,இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 04575-240435 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.