திருப்பத்தூர் பேரூராட்சியில் செயல்படாத தண்ணீர் தொட்டிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட சில இடங்களில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட சில இடங்களில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளது.
திருப்பத்தூர் பேரூராட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பஞ்சத்தினை போக்க அடி பம்புகள் அமைக்கப்பட்டன. பின்னர் அடிபம்புகள் அனைத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது ஒரு சில இடங்களில் ஆழ்குழாய் தண்ணீரின்றி வறண்டும், மோட்டார் பழுதாகி இயங்காத நிலையில் உள்ளது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நுழைவாயிலில் தண்ணீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்ததால், செம்மொழிப்பூங்கா அருகில் ரூ.3 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டாருடன் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கடந்த 6 மாதங்களாகவே இவை காட்சிப் பொருளாகவே உள்ளது. மருத்துவமனையில் போதிய குடிநீர் வசதி இல்லாத காரணத்தால், இந்த தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டிற்கு வர பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் சின்னத்தோப்புத் தெருவில் அடிபம்பு இருந்த இடத்தில் புதிய தொட்டி அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும், மின் இணைப்பு இல்லாததால் தொட்டி பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது.
கோடைகால தண்ணீர் பஞ்சத்தினை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.